Showing posts with label 2016. Show all posts
Showing posts with label 2016. Show all posts

Thursday, 2 June 2016

புதுச்சேரியில் சமூக விரோத செயல், ஊழல் புகார்களுக்கு 1031-ல் அழைக்கலாம்: கிரண்பேடி புதிய நடைமுறை

புதுச்சேரியில் சமூக விரோத செயல்கள், ஊழல், முறைகேடுகள்குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக 1031 என்ற இலவச தொலைபேசி எண் ஒருவாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற கிரண்பேடி, மாநிலத்தில் குற்றங்கள் தடுப்பு, சாலை போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டங்களை தயாரிக்கும்படி ஐஜி பிரவீர் ரஞ்சனுக்கு உத்தரவிட்டார். இதன்படி காவல்துறை ஐஜி தலைமையிலான குழு வரைவு திட்டங்களை தயாரித்து வழங்கியுள்ளது. அதன் வெளியீட்டு விழா மற்றும் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டம் நேற்று இரவு கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா வரவேற்றார். வரைவுத் திட்டங்கள் தொடர்பாக ஐஜி பிரவீர் ரஞ்சன் நோக்கவுரை ஆற்றினார். வரைவுத் திட்டங்களை வெளியிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசியதாவது:
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று நடந்த பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆங்கிலத்தில் பேச, அதனை டிஐஜி கண்ணன் ஜெகதீசன் தமிழில் மொழிபெயர்க்கிறார்.
‘‘புதுச்சேரி மிகவும் அழகான அமைதியான மாநிலமாகும். இச்சிறிய யூனியன் பிரதேசத்தில் குற்றங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுக்கவில்லை என்றால் காவல்துறை தங்கள் பணிகளை செய்யவில்லை என்பது தான் பொருளாகும்.

குற்றங்களை தடுப்பதில் காவல்துறை மட்டும் தனித்து செயல்பட இயலாது. பொதுமக்கள் பங்களிப்பும் அவசியமாகும். இரு தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் குற்றமில்லா நகராக புதுவையை உருவாக்க முடியும்.

புதுச்சேரியில் நடைபெறும் சமூகவிரோத செயல்கள், ஊழல், முறைகேடு, ரௌடிகள் குறித்த விவரங்கள் தொடர்பான புகார்களை பொது மக்கள் தெரிவிக்க காவல்துறை சார்பில் 1031 என்ற இலவச தொலைபேசி எண் இன்னும் ஒரு வாரத்தில் அறிமுகம் செய்யப்படும். அதாவது வரும் புதன்கிழமை முதல் இந்த தொலைபேசி எண் செயல்படும். புதுச்சேரியில் குற்றங்களை ,ஊழல், குறித்த தகவல்களை 1031 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

புகார்கள் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். துணை நிலை ஆளுநர், தலைமை செயலர், காவல்துறை தலைவர் என மூவருக்கும் மட்டும் தெரியும். தகவல் தெரிவிப்போர் விரும்பினால் மட்டுமே அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். மேலும் தகவல் உண்மையாக இருந்தால் உரிய வெகுமதியும் தரப்படும்.

Tuesday, 31 May 2016

இசையில் சாதனை: ரஹ்மானுக்கு ஜப்பானில் கவுரவம்!

இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் ஃபுக்குவோகா பரிசு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் இசைத்துறையில் சாதித்ததற்கு இந்த விருது அவருக்கு அளிக்கப்படவுள்ளது.
ஜப்பானின் ஃபுக்குவோகா பரிசு, ஃபுக்குவோகா என்ற நகரத்தின் சார்பிலும், யோகடோபியா என்ற அமைப்பின் சார்பிலும் வழங்கப்படுகிறது. ஆசிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் தனிநபர்களுக்கு அல்லது அமைப்புக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
ஃபுக்குவோகா பரிசு மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. கல்வித்துறை, கலை அல்லது கலாச்சாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கிராண்ட் ப்ரைஸ் வழங்கப்படுகிறது. ஆசிய கண்டம் சார்ந்த மனித, சமூக அறிவியல் ஆராய்ச்சியில் சாதித்தவர்களுக்கு அகாடமிக் ப்ரைஸ் வழங்கப்படுகிறது. ஆசியாவின் பலவகையான கலை மற்றும் கலாச்சாரத்துக்கு பங்களித்தவர்களுக்கு ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் ப்ரைஸ் வழங்கப்படுகிறது.
இதில், ஏ.ஆர்.ரஹ்மான் கிராண்ட் ப்ரைஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுள்ளார். இந்த விருது குறித்து பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், விருதுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், " ஃபுக்குவோகா பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கவுரவத்துக்கு நன்றி. உங்கள் அனைவரது அன்பைப் பற்றியும் தெரிந்து கொண்டதில் மிக்க சந்தோஷம். உங்கள் நகரத்துக்கு வரும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்" என்றார்.

Friday, 13 May 2016

அலைக்கற்றை ஒதுக்கீடு மீதான சேவை வரியால் தொலைதொடர்பு தொழில் பாதிக்கும்: அசோசம் கவலை

கோப்புப் படம்.


அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தின் மீதும் 15% சேவை வரிவிதிக்கப்படுவதான மத்திய அரசு திட்டத்தினால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தொழிற்துறை கூட்டமைப்பான அசோசம் கவலை தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடு, இதனை பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது, அதனால் வரிவிதிப்புக்கு இதனை உட்படுத்த முடியாது, எனவே அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கு சேவை வரி விதிப்பது வளரும் நாடுகளுக்கு நல்லதல்ல. இது பெரிய எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அசோசம் கருதுகிறது.

அசோசேம் இது பற்றிய தங்கள் கவலைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதமாக எழுதியுள்ளது, “அலைக்கற்றைக்கு சேவை வரி விதிகப்பட்டால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும், இதனால் சாமானிய மக்களே சேவைவரியினால் அதிகம் பாதிக்கப்படுவர்.

ரூ.30,000 கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் மீது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வரிவிதிப்பது (முதல் ஆண்டே) இந்நிறுவனங்களை நிதிநெருக்கடிக்குக் கொண்டு தள்ளிவிடும்.

இது 2011-ம் ஆண்டின் தேசிய தொலைத்தொடர்புக் கொள்கைக்கு எதிரானது. அந்தக் கொள்கையின் படி அனைவருக்கும் தொலைத்தொடர்பு சேவை, குறைந்த கட்டணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்போதைய சேவை வரி முடிவினால் நிச்சயம் சாதாரண மனிதன் முதல் தொலைத் தொடர்புத்துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

அனைத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் மீதான சேவை வரி என்பதற்குப் பதிலாக தனியார் ஆபரேட்டர்களுக்கிடையே நடைபெறும் ஸ்பெக்ட்ரம் தொலைத் தொடர்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் சேவை வரி விதிக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் கட்டனத்தை அதிகரிப்பது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மீது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு டெலிகாம் நிறுவனங்களின் முதலீடு செய்யக்கூடிய பகுதிகளையும் பாதிக்கும், இதனால் புதிய தொழில்நுட்பங்கள், 4ஜி போன்ற நெட்வொர்க்குகளைக் கொண்டு வருவது சவால் நிரம்பியதாகி விடும்.

மேலும், இந்த சேவை வரிவிதிப்பினால் எதிர்கால ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சில நிறுவனங்கள் பங்கேற்க முடியாமல் போகக்கூட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே இந்திய தொலைத் தொடர்பு தொழிற்துறை கடன் பளுவினாலும், அதிக வரிகள், லாபம் குறைவான வர்த்தகம் மற்றும் அதிக அலைக்கற்றை விலைகள் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, கூடுதல் வரிகள் விதித்தால் நிறுவனங்கள் நேரடியாகக் கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்படும் நாட்டு மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அசோசம் தனது கடிதத்தில் கவலை வெளியிட்டுள்ளது.