Showing posts with label employment news august updates 2016. Show all posts
Showing posts with label employment news august updates 2016. Show all posts

Monday, 15 August 2016

இந்திய விமானப் படைக்கான ஆள்சேர்ப்பு முகாம்

இந்திய விமானப் படைக்கான ஆள்சேர்ப்பு முகாம், மதுரையில் ஆக.26 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய விமானப் படையில் ஆண்கள் குரூப் ஒய் பிரிவில் சேருவதற்கான ஆள்சேர்ப்பு முகாம், வரும் ஆக.26 முதல் 31-ஆம் தேதி வரை மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் கலந்துகொள்பவர்கள் பிளஸ் 2 வகுப்பில் கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு 1.8.1996 மற்றும் 30.11.1999க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் ஆவர். மேற்கண்ட தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எழுது பொருள்கள், பாஸ்போர்ட் அளவிலான கடந்த ஜூன் 26-ஆம் தேதிக்கு பின் எடுக்கப்பட்ட 7 வண்ண புகைப்படங்கள், சுயமுகவரி எழுதப்பட்ட, அஞ்சல்வில்லை ஒட்டப்படாத தரமான இரண்டு வெள்ளை உறைகள் மற்றும் அனைத்து அசல் மற்றும் மூன்று நகல் கல்விச்சான்று, மதிப்பெண் பட்டியல் மற்றும் இருப்பிடச் சான்றுகளுடன் மேற்குறிப்பிட்ட நாள்களில் காலை 7 மணிக்கு இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். தங்களது தகுதியை மட்டுமே நம்பி தேர்வுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு www.airmenselection.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 3 August 2016

இளைஞர்களை ஈர்க்கும் வங்கிப் பணி

இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளுமே இப்போது பொருளாதார அதிர்வலைகளைச் சந்தித்து வருகின்றன. கிரீஸ் நாடு பெரும் கடனாளி ஆனதால் கடந்த ஆண்டு ஐரோப்பிய யூனியன் நாடுகள் தொடங்கி இந்தியாவரைப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தன. பிரிட்டன் மக்களுக்கு வேலைவாய்ப்பு, வருவாய் குறைந்ததன் விளைவாகச் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் சம்பவம் நிகழ்ந்தது. ஆக இன்றைய நிலையில் வளமான பொருளாதாரச் சூழலும் எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வேலையும் பலரின் கனவாக மட்டுமே நீடிக்கிறது. ’நிரந்த வேலை’ என்கிற சொல்லையே இன்றைய இளைஞர்களில் பலர் கேட்டிருக்க மாட்டார்கள். அதேபோல வேலை பளு, மன அழுத்தம் இல்லாத பணிச் சூழலும் அரிதாகிவருகிறது. இந்தப் பின்னணியில் வங்கிப் பணிகள் பெரிதும் கவனம் பெறுகின்றன.

இன்றைய தேதியில் இந்தியாவைப் பொறுத்தவரை ஐ.டி. துறையைக் காட்டிலும் மளமளவென வளர்ந்து வருவது வங்கித் துறையாகும். ஏனென்றால், பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள்வரை பல வங்கி கிளைகள் புதிதாகத் திறக்கப்பட்டுவருகின்றன. இதனால் இத்துறையில் வேலைவாய்ப்பும் வேகமாக அதிகரித்துவருகிறது. அதிலும் அரசு வங்கிகளில் வேலை என்பது மரியாதையும், நல்ல சம்பளமும், வேலை உத்தரவாதமும் நிறைந்தது. உங்களுடைய பணிவாழ்க்கையை எப்படி அமைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு உகந்தது வங்கி வேலையா என்பதை இப்போது கண்டுபிடிக்கலாம் வாங்க.

வேலை தகுதி
வங்கி பணியில் சேரப் பட்டதாரியாக இருக்க வேண்டும். அதற்காகக் குறிப்பிட்ட பாடப் பிரிவில்தான் பட்டதாரியாக இருக்க வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. கலை, அறிவியல், வணிகவியல் என எந்தப் பாடப் பிரிவைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். வயது வரம்பு 20-28 க்குள் இருக்க வேண்டியது மட்டும் கட்டாயம். அதே நேரத்தில் கணித ஆற்றல் மிக்கவர்களுக்கு இந்த வேலை ஏதுவாக இருக்கும். பகுப்பாய்வு, தர்க்கத் திறன், பொது அறிவு, அடிப்படை கணினி அறிவு, ஆங்கில மொழி அறிவு ஆகியவற்றைச் சோதிக்கும் ஆப்டிடியூட் தேர்வை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

ப்ரோபேஷனரி ஆபிசர் பதவிக்கான தேர்வில் மட்டும் கட்டுரை வடிவில் ஆங்கிலத்தில் விரிவான விடையளிக்கும் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்கா ணலும் குழுகலந்துரையாடலும் நடத்தப்படும். அடுத்து, பண முதலீடு, சேமிப்பு, கடன், வட்டி உள்ளிட்ட காரணங்களுக்காக வங்கியை அணுகும் பலவிதமான மக்களை அன்றாடம் சந்திக்கும் வேலை இது. ஆகவே, வாடிக்கையாளர்கள் சேவையில் சிறப்பாக விளங்கும் அணுகுமுறை அவசியம்.

வாய்ப்பும் போட்டியும்
வேலைவாய்ப்பு வங்கித் துறையில் அதிகரித்திருந்தாலும் நிச்சயமாகப் போட்டியும் கடுமையாகி இருக்கிறது என்பது நிதர்சனம். தனியார் வேலைகளில் ஏற்படும் அதிருப்தி பலரை அரசு வங்கிகளை நோக்கித் திருப்பியுள்ளது. இதனால் சில ஆயிரம் பணியிடங்களுக்குப் பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். இருந்தாலும் பலவிதமான வங்கித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐ.பி.பி.எஸ் நான்கு தேர்வுகள், எஸ்.பி.ஐ. இரண்டு தேர்வுகள் ஆர்.பி.ஐ. இரண்டு தேர்வுகள் - இப்படிப் பல தேர்வுகள் நடப்படுகின்றன. குமாஸ்தா (Clerk) வேலைக்கு மாதச் சம்பளம் ரூ.18,000 என்பதில் தொடங்கி அதிகாரி வேலைகளுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கப்படுகின்றது. இதுதவிரப் பல சலுகைகளும் உண்டு.

எப்படித் தயாராவது?
வங்கித் துறையில் சேர முடிவெடுத்தால் முதல் கட்டமாக அதில் பணியாற்றுபவர்களோடு கலந்துரையாடுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அறிவாற்றல் இருக்கும். வங்கி தேர்வுக்குத் தேவையான தர்க்க அறிவு, பொது அறிவு, மொழி அறிவு, கணித அறிவு எனப் பலவற்றைக் கூர்மைப்படுத்தச் சரியான பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுப்பது உகந்தது. தலைசிறந்த பயிற்சி மையத்தில் படித்தாலும் கற்றுக்கொண்டவற்றை மீண்டும் மீண்டும் சுயமாகப் பயிற்சி செய்வது இன்றியமையாதது.

சரியான பயிற்சி, எளிய வெற்றி!
“சமீபத்தில் வெளியான எஸ்.பி.ஐ. கிளர்க் தேர்வுக்கான முடிவில் எங்களுடைய ரேஸ் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி பெற்றவர்களில் 4733 தேர்வாகியிருப்பது பெருமையாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் நாங்கள் வெறுமனே தேர்வுக்கான பாடத்திட்டத்தை மட்டும் கற்பிப்பதில்லை. இங்குப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வங்கி வேலை சம்பந்தப்பட்ட 10,0000 புத்தகங்கள் கொண்ட சிறப்பான நூலகத்தில் எந்நேரமும் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது, 150 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன, கூடுதல் கவனம் செலுத்த 5 மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாகக் கல்லூரி மாணவர்களும் ஐ.டி. துறை பணியாளர்கள் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் பெண்கள் வங்கி வேலையில் சேர விரும்புகிறார்கள்.

எட்டாம் வகுப்பின் அடிப்படை கணிதத்தைச் சிறப்பாகப் பயின்றாலே எளிதில் இந்தத் தேர்வில் வெற்றி பெறலாம். அதுவும் தமிழகத்தைப் பொருத்தவரை 100-க்கு 21 மதிப்பெண் எடுத்தாலே பாஸ். தொடர்ந்து தேர்வுகளை எழுதிப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறலாம். அடுத்த ஆறு மாதங்களில் 10 வங்கித் தேர்வுகள் நடைபெற உள்ளன. அத்தனைக்கும் ஒரே பாடத்திட்டம்தான். 25,000 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்போதிலிருந்து முறையாகப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தால் யாராக இருந்தாலும் நான்கு அல்லது ஐந்தாவது தேர்வில் வங்கி வேலையை வென்றெடுக்கலாம்!”

Wednesday, 20 July 2016

வேலை வேண்டுமா?- ரிசர்வ் வங்கி அதிகாரி ஆகலாம்

நம் நாட்டின் வங்கிப் பணிகளை ஒட்டுமொத்தமாக ஒழுங்குபடுத்தும் அமைப்பாகத் திகழ்வது இந்திய ரிசர்வ் வங்கிதான். இது, வங்கிகளின் வங்கி (Bankers’ Bank) என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தவிர மற்ற அனைத்து அரசு வங்கிகளுக்கும் தேவைப்படும் ஊழியர்களும் அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் என்ற அமைப்பு மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஸ்டேட் வங்கியும், இந்திய ரிசர்வ் வங்கியும் அலுவலர்களைத் தாங்களே தேர்வுசெய்துகொள்கின்றன.

யார் விண்ணப்பிக்கலாம்?
தற்போது குரூப்-பி அதிகாரி பணியில் 182 காலியிடங்களை நிரப்ப ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. வயது வரம்பைப் பொறுத்தவரையில், 21 முதல் 30 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.ஃபில். பட்டதாரிகளாக இருந்தால் 32 வரையும், பிஎச்.டி. முடித்திருந்தால் 34 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். ஒட்டுமொத்த வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி உரிய தளர்வு உண்டு.

என்ன கேட்பார்கள்?
எழுத்துத் தேர்வு (2 நிலைகள்) மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் குரூப் பி அதிகாரிகள் தேர்வு செய்யப்படு கிறார்கள். எழுத்துத் தேர்வில் உள்ள 2 நிலைகளுமே ஆன்லைன்வழித் தேர்வாகத்தான் இருக்கும்.
முதலாவது தேர்வில் (அப்ஜெக்டிவ் முறை) கணிதம், ரீசனிங், பொது ஆங்கிலம், பொது அறிவு ஆகிய பகுதிகளிலிருந்து 200 மதிப்பெண்ணுக்குக் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் 2-வது நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில் 3 பிரிவுகள் உண்டு. முதல் பிரிவில் பொருளாதாரம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான பாடங்களில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

இதற்கு 300 மதிப்பெண். 2-வது பிரிவில் ஆங்கிலத்தில் விரிவாக விடையளிக்கும் வினாக்கள் (Descriptive type) கேட்கப்படும். 3-வது பிரிவில் நிதி மேலாண்மை பாடத்தில் அப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒன்றரை மணி நேரம் அளிக்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். 2-வது நிலை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார்செய்யப்பட்டு அதன் பேரில் பணி நியமனம் நடைபெறும்.

ஆன்லைன் விண்ணப்பம், தேர்வு நாள் உள்ளிட்ட விவரங்கள் வெகு விரைவில் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் (www.rbi.org.in) வெளியிடப்படும். குரூப்- பி அதிகாரிகளுக்கு ஆரம்ப நிலையில் சம்பளம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கிடைக்கும். அதோடு பல்வேறு அலவன்ஸ்களும் உண்டு. இளம் வயதில் குரூப்-பி அதிகாரியாகப் பணியில் சேர்ந்தால் பிற்காலத்தில் ரிசர்வ் வங்கி துணை கவர்னராகவும் ஆகலாம்!